ஒரு புதிய பெயர்
மகிழ்ச்சியான வியாழன் வாழ்த்துகள்! ✌🏽 இதுவரை உங்களது வாரம் எப்படிச் சென்றது?
நாம் அப்போஸ்தலர் புத்தகத்தின் வழியிலான நமது பயணத்தைத் தொடர்கிறோம், இது இன்று நம்மை அப்போஸ்தலர் அதிகாரம் 11க்கு அழைத்துச் செல்கிறது. சவுலின் மனமாற்றத்தைப் போலவே, இதுவும் அப்போஸ்தலர் புத்தகத்தில் ஒரு முக்கியமான தருணத்தைப் பற்றியது: தேவனுடைய திருச்சபையில் புறஜாதிகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவது.
புறஜாதிகளும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு மனமாறுகிறார்கள் என்ற செய்தி வேகமாகப் பரவுகிறது. ஆனால் அனைவரும் உற்சாகமாக இல்லை. பல விசுவாசிகள் இன்னும் கிறிஸ்தவத்தை ஒரு யூத வேதப்புரட்டாகவே பார்க்கிறார்கள், மேலும் தேவன் யூத மதத்திற்கு வெளியே கிரியை செய்வதை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. விருத்தசேதனம் இல்லாதவர்களும் தேவனுடைய குடும்பத்தில் முழு பங்காளிகளாக இருக்கிறார்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பேதுரு புறஜாதிகளுடைய வீடுகளுக்குள் பிரவேசித்து, அவர்களோடு போஜனம் பண்ணினார் என்று சொல்லி அவர் விமர்சிக்கப்படுகிறார் (அவர்களுடைய சிந்தனையின்படி, இது நியாயப்பிரமாணத்திற்கு விரோதமானது).
ஆதியிலே தங்கள்மேல் இறங்கினதுபோலவே, ஆவியானவர் அவர்கள்மேலும் எவ்வாறு இறங்கினார் என்பதை பேதுரு விளக்குகிறார். அவருடைய முடிவு விளக்கம் எளிமையும் தாழ்மையும் நிறைந்ததாய் உள்ளது: “தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம்?” (அப்போஸ்தலர் 11:17). தேவனுடைய கிரியை தன் பாரம்பரியத்தை விடப் பெரியது என்பதை பேதுரு ஒப்புக்கொள்கிறார்.
அந்தியோகியாவிலும், யூதர்கள் மற்றும் கிரேக்கம் பேசுகிறவர்கள் இருவரையும் கொண்ட ஒரு புதிய சபை வளர்ந்து வருகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க பர்னபா அனுப்பப்படுகிறார். ஆனால் தேவனுடைய கிருபையைக் காணும்போது, அவர் சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் உறுதியாயிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்கிறார்.
அந்தியோகியாவில்தான் சீஷர்கள் முதல்முறையாக ‘கிறிஸ்தவர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அநேகமாக ஒரு பட்டப்பெயராக—ஒருவேளை பரியாசமாகக்கூட சொல்லப்பட்டிருக்கலாம்—ஆனால் அது ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகிறது: அவர்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர்கள், என்பதை.
அப்போஸ்தலர் 11-இல் உள்ள நிகழ்வுகள் ஒரு முக்கியமான தர்மசங்கடமான நிலையை முன்வைக்கின்றன, அது இன்றைக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. புறஜாதிகளுடனான பேதுருவின் தொடர்புகள் புதியதாகவும், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுக்கு இணங்காமலும் இருந்ததால், அதைக் குறைசொன்ன விசுவாசிகளுக்கு பேதுரு பதிலளிக்க வேண்டியிருந்தது.
தேவன் புதிதாக ஒன்றைச் செய்யும்போது உங்கள் பார்வையை விரிவுபடுத்த நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?