மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை
இன்று எப்படி இருக்கிறீர்கள்? அப்போஸ்தலர் புத்தகத்தின் வழியிலான பயணத்தைத் தொடர உற்சாகமாக இருக்கிறீர்களா?
இன்று நாம் அப்போஸ்தலர் 19க்கு வருகிறோம்,
இங்கே பவுல் எபேசுவில் யோவானின் ஞானஸ்நானத்தைப் பற்றிக் கேட்டிருந்த, ஆனால் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேட்டிராத சீஷர்களைச் சந்திக்கிறார். அவர் இயேசுவைப் பற்றி அவர்களுக்குப் போதித்து, அவருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறுகிறார்கள்.
விசுவாசம் முழுமையான சுவிசேஷத்தில், அதாவது இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் ஆவியானவரின் ஈவு, இவைகளில் வேரூன்றியிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.
அதைத் தொடர்ந்து வல்லமையான ஊழியத்தின் காலம் வருகிறது. பவுல் தினமும் போதிக்கிறார். அற்புதங்கள் நடக்கின்றன. அவரைத் தொட்ட துண்டுகளும் கச்சைகளும் கூட மனிதர்களைக் குணமாக்க தேவனால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த அதிகாரம் ஒரு கூர்மையான முரண்பாட்டையும் காட்டுகிறது.
திரிந்துவாழ்கிற சில யூத மந்திரவாதிகள் இயேசுவின் நாமத்தை ஒரு மந்திரச் சொல்லாகப் பயன்படுத்த முயல்கிறார்கள். “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்” (அப்போஸ்தலர் 19:13) என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவரை உண்மையாகத் தெரியாது. அந்த அசுத்த ஆவி: “இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்?” (அப்போஸ்தலர் 19:15) என்று பதிலளிக்கிறது.
இயேசுவின் நாமம் ஒரு மந்திரச் சொல் அல்ல என்பதை இந்த சம்பவம் நமக்கு தெளிவாக்குகிறது. அவருடைய நாமத்தின் வல்லமை நாம் அவரிடம் கொண்டுள்ள உறவில் நிலைத்திருக்கிறது.
எபேசுவில் இதன் தாக்கம் ஆழமானது. ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள். சூனிய புஸ்தகங்கள் பகிரங்கமாகச் சுட்டெரிக்கப்படுகின்றன. சுவிசேஷம் இருதயங்களையும், பொருளாதாரத்தையும், கலாச்சாரத்தையும் தொடுகிறது. விக்கிரகங்களின் முகமூடிகள் கிழிக்கப்படுகின்றன; கலக்கம் உண்டாகிறது.
எழுப்புதல் மேலோட்டமானது அல்ல. அது எதிர்கொண்டு, சுத்திகரித்து, சீர்திருத்துகிறது.
உங்களுக்கு தேவனுடன் உறவு இருக்கிறதா? பிரசங்கங்களைக் கேட்டோ அல்லது வேதாகமத்தை வாசித்தோ அவருடைய நாமத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறீர்களா, அல்லது உங்களது இருதயத்தை அவருக்கு உண்மையில் திறந்து அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்கிறீர்களா?
தேவனுடன் ஒரு உறவை உருவாக்குவது மற்ற எந்த உறவையும் போன்றதுதான். அதற்கு நேரம், பிணைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. எப்படி என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தொடங்குவதற்கு உதவ YouVersion செயலியில் நான் எழுதிய இந்த வாசிப்புத் திட்டத்தை பரிந்துரைக்கிறேன்.