நீங்கள் நினைப்பதை விட சமீபமாகவே இருக்கிறார்.
அப்போஸ்தலர் புத்தகத்தில் பவுலின் கதையை வாசித்து வரும்போது, பவுலுக்கு ஓய்வே கிடைக்கவில்லையோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவர் சென்ற இடமெல்லாம் பிரச்சனைகள் அவரைப் பின்தொடர்ந்தன.
அப்போஸ்தலர் 23ல், பவுல் மீண்டும் பகைமை நிறைந்த தலைவர்களால் சூழப்பட்டு, ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக நிற்கிறார். உரையாடல் தீவிரமடைகிறது, ஆனால் பவுல் பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையிலான பிரிவினையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார்.
சூழ்நிலை பதற்றமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது, மேலும் அது கைமீறிப் போகிறது. இந்த அதிகாரத்தை மிகவும் உலகப்பிரகாரமாக ஆக்குவது இந்த நிகழ்வுதான் என்பதுபோல் இருக்கிறது.
பவுல் தொட முடியாத ஒரு வீரன் அல்ல. அநியாயமாக அடிக்கப்படும்போது அவர் கொதித்தெழுகிறார். பிரதான ஆசாரியனைத் தான் முகவரிட்டுப் பேசியது தெரிந்ததும் அவர் தன் வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டியிருக்கிறது. பரிசுத்தம் மானிடத்தன்மையை விலக்குவதில்லை. பலவீனங்கள் உள்ள மனிதர்கள் மூலமாகவும் தேவன் கிரியை செய்கிறார்.
ரோம போர்ச்சேவகர்கள் அவரைப் பாதுகாப்பிற்காக அழைத்துச் செல்ல வேண்டிய அளவுக்கு சூழ்நிலை தீவிரமடைகிறது. பின்னர், இரவில், ஆரவாரம் தணிந்து பவுல் தனியாக இருக்கும்போது, கர்த்தர் கடந்துவருகிறார்:
"அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்றು: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்." – அப்போஸ்தலர் 23:11
அவர் விரிவான விளக்கம் எதையும் அளிக்கவில்லை, புதிய வழியையும் சுட்டிக்காட்டவில்லை, மாறாகத் தனது பிரசன்னத்தின் ஆறுதலையும் தொடர்ந்து செல்வதற்கான தைரியத்தையும் தருகிறார். எனவே, அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுவிசேஷப் பணி தொடர்கிறது.
இதற்கிடையில், ஒரு குழு பவுலைக் கொலை செய்ய சதி செய்கிறது. பவுல் கொல்லப்படும் வரை தாங்கள் உணவருந்துவதில்லை அல்லது குடிப்பதில்லை என்று நாற்பதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சபதம் செய்கிறார்கள். ஒரு இளம் சகோதரன் மற்றும் ஒரு ரோம அதிபதி மூலமாக தேவன் பவுலைப் பாதுகாக்கிறார். அவர் அமைதியாகக் காரியங்களை வாய்க்கப்பண்ணிப் பாதுகாக்கிறார்.
உலகமே உங்களுக்கு எதிராக இருப்பது போல எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? எல்லாரும் உங்களை காயப்படுத்த நினைப்பது போலவும், உங்களுக்கு ஓய்வே கிடைக்காதது போலவும் உணர்கிறீர்களா?
பவுலிடம் இயேசு கூறிய வார்த்தைகளை, அவர் உங்களிடமும் கூறுகிறார்: “திடன்கொள்!” அவர் நீங்கள் நினைப்பதை விடச் சமீபமாகவே இருக்கிறார்.