சரியான தருணத்தைப் பயன்படுத்துங்கள்
உங்கள் சாட்சியைப் பகிர்ந்துகொள்ளவும், உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த காரியங்களுக்குச் சாட்சிகொடுக்கவும் நீங்கள் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறீர்களா?
என்னைக் குறித்து அது உண்மை என்று நான் சொல்ல விரும்புகிறேன், ஆனால் மனிதர்களிடம் பேசுவதையும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதையும் நான் எவ்வளவு நேசித்தாலும், தன் வாழ்க்கையில் கிரியை செய்யும் தேவனுடைய வல்லமைக்குச் சாட்சிகொடுக்க எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாத பவுலைப் போல நான் இன்னும் கொஞ்சம் இருக்க விரும்புகிறேன்.
அப்போஸ்தலர் 26ல், பவுல் மீண்டும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருப்பதை நாம் வாசிக்கிறோம், இந்த முறை ஏரோது அகிரிப்பா ராஜாவிற்கும் பெஸ்துவிற்கும் முன்பாக. அதிகாரம் நிறைந்த மண்டபத்தில் இரண்டு பலம்படைத்த மனிதர்கள். நடுவில் பவுல் நிற்கிறார். தன் வாழ்க்கையில் தேவன் செய்த காரியங்களைச் சொல்வதற்கு அவர் அந்தத் தருணத்தைப் பயன்படுத்துகிறார்.
பவுல் தன் கதையைச் சொல்கிறார்: அவர் எப்படி முதலில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார், ஆனால் தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயேசு கிறிஸ்துவைச் சந்தித்த அனுபவம் எப்படிப்பட்டது என்பதையும், அந்தத் தருணம் எப்படி எல்லாவற்றையும் மாற்றியது என்பதையும், துன்புறுத்துபவராக இருப்பதிலிருந்து அவர் ஒரு சாட்சியாக மாறியதை பற்றியும் எடுத்துரைத்தார்.
பவுல் தன் விசுவாசத்தைப் பற்றி வெட்கப்படவில்லை.
அவர் நேர்மையாகவும் மன உறுதியோடும் பேசுகிறார். அவரது இலக்கு தன்னை நியாயப்படுத்துவது அல்ல, மாறாக சுவிசேஷம் உண்மை என்பதைக் காட்டுவதே. அகிரிப்பா ராஜாவின் எதிர்வினையிலிருந்து இது தெளிவாகிறது: “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.” (அப்போஸ்தலர் 26:28)
சாட்சிகொடுப்பது பிரசங்கிகளுக்கோ அல்லது நற்செய்தி அறிவிப்பவர்களுக்கோ மட்டுமே உரியது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது எளிமையான ஒன்றில் தொடங்குகிறது என்பதை பவுல் காட்டுகிறார்: உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த காரியங்களைப் பகிர்வது. அவரது கதையில், பவுல் சொல்வது:
- அவர் யாராக இருந்தார்
- இயேசுவை எப்படிச் சந்தித்தார்
- அதன் பின் என்ன மாற்றம் ஏற்பட்டது
நீங்களும் அதைச் செய்யலாம்! ஒருவேளை உங்கள் "தமஸ்கு தருணம்" அவ்வளவு நாடகத்தன்மை வாய்ந்ததாக இல்லாமலிருக்கலாம். ஆனால் உங்கள் கதையும் தேவனால் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு கதையாகும்.
உங்கள் கதையை எழுதி வைக்கும்படி இன்று நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். அதை எளிமையாக வைத்து, பவுல் பயன்படுத்திய மூன்று படிகளைப் பின்பற்றுங்கள். அதைச் சில முறை உச்சரித்து ஒத்திகை செய்து பாருங்கள், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது, தேவன் உங்களுக்குச் செய்த காரியங்களை ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருக்க ஜெபியுங்கள்.