பாவிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும் ஒரே அளவிலான கிருபை தேவையா?
கேம்ரனும் நானும் The Chosen பார்ப்பதை விரும்புகிறோம் என்பது இரகசியமல்ல. முன்பு ஒருநாள், தொடரில் உள்ள இரண்டு மரியாள்களைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஒருவர் மகதலேனா மரியாள், ஆரம்பத்திலிருந்தே அவளது சந்தேகத்திற்குரிய கடந்த காலத்தைப் பற்றியும், அவள் ஒரு வேசி என்ற உண்மையைப் பற்றியும் நாம் அறிந்துகொள்கிறோம். இன்னொருவர், இயேசுவின் தாயாகிய அன்னை மரியாள். அவளைப் பற்றி, அவள் தேவனுக்குப் பயந்த, பக்தியுள்ள பெண் என்றும், இயேசுவைப் பெற்றெடுத்தபோதும் கன்னியாகவே இருந்தாள் என்றும் நாம் அறிவோம்.
என்ன ஒரு முரண்பாடு.
இருப்பினும் இரண்டு பெண்களுக்கும் இயேசு தேவைப்பட்டார். இருவருக்குமே ஒரு இரட்சகர் தேவையாயிருந்தார். இருவரையும் இரட்சிக்க அதே அளவிலான கிருபை தேவைப்பட்டது!
இரட்சிப்பு என்பது ஒரு குறுகிய அழைப்பு அல்ல. அது தேவனின் பரந்த இருதயத்தைப் பிரதிபலிக்கிறது.
பேதுரு எழுதியது:
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். – 2 பேதுரு 3:9
இதுதான் தேவனின் இருதயம். அவர் மீட்பை விரும்புகிறார். அவர் சீர்படுத்தலை விரும்புகிறார். அவர் ஒரு உறவை விரும்புகிறார்.
நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்ந்தவள், அதனால் நான் இயேசுவின் மீது முதன்முதலில் விசுவாசம் வைத்தபோது நான் ஒரு சிறுமியாக இருந்தேன். ஆனால் அந்தத் தருணத்திற்குப் பிறகும், நான் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருந்தது. நான் அலைந்து திரிந்தேன், கேள்விகளை எழுப்பினேன், வளர்ந்தேன், என் விசுவாசம் காலப்போக்கில் முதிர்ச்சியடைந்தது. உலகம் வழங்கியவைகளால் நான் ஈர்க்கப்பட்ட காலங்களும், சமூகத்தில் எனது இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த காலங்களும் இருந்தன.
ஆனால் நான் எந்தக் கட்டங்களை கடந்திருந்தாலும், இயேசு என்னைத் தொடர்ந்தார். அவர் எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார், “நான் உன்னை இரட்சித்தேன். நீ என்னுடையவள்”, என்று.
வில்லியம் ஜேயின் அவர்களின் இந்தப் பொன்மொழியை நான் விரும்புகிறேன்:
என் நினைவாற்றல் குறைந்து வருகிறது, ஆனால் நான் ஒருபோதும் மறக்காத இரண்டு விஷயங்கள் உள்ளன—நான் ஒரு பெரிய பாவி மற்றும் இயேசு கிறிஸ்து ஒரு பெரிய இரட்சகர்.
இன்று நீங்கள் அவரிடமிருந்து தொலைவில் இருந்தால், இதைக் கேளுங்கள்: அவர் உங்களை விரும்புகிறார். இரட்சிப்பு என்பது அவருடைய திட்டம். அது அவருடைய முயற்சி. அது அவருடைய பரிசு.
மேலும் விசுவாசிக்கிற நமக்கு, பரலோகம் ஒரு நாள் ஒரே கருப்பொருளுடன் எதிரொலிக்கும்: இரட்சிப்பு நம்முடைய தேவனுக்கே உரியது.
இன்றைய அதிசயம் என்னவென்றால், நமது வாழ்க்கை… கதை எதுவாக இருந்தாலும்… இயேசுவைப் பற்றியதாக மட்டுமே இருக்க முடியும்!
கர்த்தராகிய இயேசுவே, என்னைத் தொடர்ந்து வந்ததற்காக உமக்கு நன்றி. உம்முடைய பொறுமைக்கும் அன்பிற்கும் நன்றி. மற்றவர்களுக்கான உம்முடைய இருதயத்தைப் பிரதிபலிக்க என் வாழ்க்கையைப் பயன்படுத்தும். தைரியத்துடனும் இரக்கத்துடனும் இரட்சிப்பின் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவும். ஆமென்.