நீங்கள் எப்போதாவது ஒரு நண்பரிடம் பொய் சொல்லியிருக்கிறீர்களா?
இன்று நான் ஒரு நண்பரிடம் பொய் சொன்னேன். அவர் என்னிடம், "எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். என் பதில் "நான் நலமாக இருக்கிறேன்", என்பதாகும், ஆனால் நான் நலமாக இல்லை.
நான் நேர்மையாக சொல்லவேண்டுமானால், நான் சொல்வதற்கு மிகவும் கடினமான காரியங்களுள் ஒன்று, "நான் நலமாக இல்லை", என்பதாகும்.
நம்மில் பலர் எல்லாம் நன்றாக இருப்பதாக நடிப்பதில் வல்லுநர்களாகிவிட்டோம். யாராவது நாம் எப்படி இருக்கிறோம் என்று கேட்டால், நாம் தானாகவே, "நன்றாக இருக்கிறேன்" என்று பதிலளிக்கிறோம். நாம் சோர்வாக இருந்தாலும், நம் இருதயம் பாரமாக இருக்கும்போதும் அல்லது வாழ்க்கை சிதைவது போல உணரும்போதும் கூட.
ஆனால் சுகம் பெறுவது நேர்மையில் தொடங்குகிறது.
நேற்று நாம் நாகமானைப் பற்றிப் பேசினோம்—அவன் ஒரு கடினமான உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது: அவன் நோயுற்றிருந்தான், அவனால் அதைத் தானே சரிசெய்ய முடியவில்லை.
ஒரு வெற்றிபெற்ற படைத்தளபதிக்கு, அது மிகவும் தாழ்மையுணர்வை ஏற்படுத்துவதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நாம் நொறுங்கியிருப்பதை ஒப்புக்கொள்வது பெரும்பாலும் தேவனிடமிருந்து சுகத்தை பெற்றுக்கொள்ளும் பயணத்தை நோக்கிய முதல் படியாகும்.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” – 1 யோவான் 1:9
பாவஅறிக்கை என்பது அவமானத்தைப் பற்றியது அல்ல. அது விடுதலையைப் பற்றியது.
ஆண்டவர் நமக்குத் தேவையை நாம் ஒப்புக்கொள்ளும்போது, அவருடைய கிருபை நம் வாழ்க்கையில் செயல்படுவதற்கான கதவைத் திறக்கிறோம்.
நாம் நலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதற்கு பூமியிலேயே பாதுகாப்பான இடங்களுள் ஒன்றாகத் திருச்சபை இருக்கும்.
ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையான நொறுக்குதலை உள்ளத்திற்குள் சுமக்கிறார்கள்—உடைந்த கனவுகள், உடைந்த உறவுகள், உடைந்த நம்பிக்கைகள்.
ஆனால் நற்செய்தி என்னவென்றால், தேவன் சீர்படுத்துவதில் வல்லவர்.
நாம் அவரிடம் வருவதற்கு முன்பு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் நம்மை நேர்மையாக வரக் கேட்கிறார்.
நாம் நடிப்பதை நிறுத்தும் தருணமே உண்மையான சுகம்பெறுதல் துவங்கும் தருணமாகும்.
எனவே இன்று நான் நேர்மையைத் தேர்ந்தெடுக்கிறேன். என் தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். என் விரக்திகளை. என் வாழ்வில் ஆண்டவர் வேண்டும் என்ற என் தேவையை, நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது பலவீனம் அல்ல. இதுதான் விசுவாசம்!
நாம் ஜெபிப்போம்:
பரலோகப் பிதாவே, நான் நலமாக இல்லாதபோது நலமாக இருப்பதாக நடிப்பதை நிறுத்த எனக்கு உதவும். என் நொறுங்கிய தன்மையை உம்மிடம் கொண்டு வர எனக்கு தைரியத்தைத் தாரும். கிருபையுடனும், மன்னிப்புடனும், சுகமளிப்புடனும் என்னை நீர் சந்திப்பதற்காக நன்றி. நேர்மையில் வாழவும் உம்முடைய சீர்படுத்தும் வல்லமையை நம்பவும் எனக்குக் கற்றுத்தாரும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.