ஒரு அற்புதத்தின் இருண்ட பக்கம்
அற்புதங்களுக்கு ஒரு மறுபக்கம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு அற்புதம் நடக்கும்போது எல்லாரும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், அதைக் கேள்விப்படும் எவரும் கொண்டாடுவார்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில், பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை.
நேற்று, பிறவியிலேயே குருடனாயிருந்த ஒரு மனிதன் சுகமடைந்த அற்புதத்தைப் பற்றி நாம் பேசினோம் (நீங்கள் இந்தக் கதையை யோவான் 9-இல் வாசிக்கலாம்).
பிறவியிலேயே பார்வையற்ற அந்த மனிதனுக்குப் பார்வை வந்த அந்தத் தருணத்தில், அவர் பேரானந்தம் அடைந்திருக்க வேண்டும். அவரை அறிந்திருந்தவர்கள் அவருடன் சேர்ந்து கொண்டாடியிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்…ஆனால் அப்படி நடக்கவில்லை.
மாறாக, மக்கள் சொன்னது:
“இவன்தான் முன்பு இங்கே உட்கார்ந்து பிச்சை எடுத்தவன் அல்லவா?”
“இல்லை,” என்றார்கள் மற்றவர்கள், “அவனுடைய சாயலாயிருக்கிறான், அவ்வளவுதான்!”, “இது சாத்தியமில்லை!” (வசனங்கள் 8 மற்றும் 9).
மக்கள் சந்தேகித்தனர்.
மக்கள் நிராகரித்தனர்.
மக்கள் மறுத்தனர்.
ஏன்? ஏனென்றால், அற்புதங்கள் நமது வகைப்பாடுகளுக்குச் சவால் விடுகின்றன. நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்திருந்தவற்றையே நம்மைக் கேள்வி கேட்க வைக்கின்றன.
“உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி…” (வசனம் 11).
அவ்வளவுதான்.
இயேசு. சேற்றை. உண்டாக்கினார்.
அது பகட்டானதாக இருக்கவில்லை. அதில் சிறிதும் தர்க்கம் இருக்கவில்லை. இறையியல் ரீதியாக நேர்த்தியாகவும் இல்லை. ஆனால், அது பலனளித்தது.
யோவான் 9-ஆம் அதிகாரத்தின் மீதிப் பகுதி, அது மிகவும் சோகமாக இல்லாதிருந்தால், கிட்டத்தட்ட நகைச்சுவையாக இருந்திருக்கும். அந்த மனிதன் ஒரு குற்றவாளியைப் போல விசாரிக்கப்படுகிறான். அவனுடைய பெற்றோரைக்கூட இதில் இழுத்து வருகிறார்கள்!
ஆனால், முன்பு பார்வையற்றிருந்த அந்த மனிதன் மீண்டும் மீண்டும் இதையேக் கூறுகிறான்.
“நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.”
அவனுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்கவில்லை. அவன் வேதாகமப் பட்டம் பெற்றிருக்கவில்லை, வேதவசனங்களையும் மனப்பாடம் செய்திருக்கவில்லை. ஆனால், அவனிடம் அவனுடைய சாட்சி இருந்தது. அவன் தேவனுடைய வல்லமைக்குச் சாட்சியாக இருந்து, அதைப் பற்றிக்கொண்டான்.
உங்களிடமும் ஒரு சாட்சியம் இருக்கிறது. பிறவிக்குருட்டிலிருந்து குணமடைந்ததைப் போல அது பெரியதாக இல்லாமல் இருக்கலாம், ஆனாலும், தேவன் சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் வாழ்வில் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறார். மற்றவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் அவற்றை பகிர்ந்துகொள்வது முக்கியம்.
நான், தனிப்பட்ட முறையில், உங்கள் சாட்சியைக் கேட்க விரும்புகிறேன். அதை நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த உரை “அசைவாடும் அற்புதங்கள்” என்ற மின்-புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கதையைப்பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக சிந்திக்க விரும்பினால், இந்த மின்-புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யவும். இந்த அற்புதத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு சிறந்த பாடங்களையும், சிந்திப்பதற்கான தூண்டக்கூடிய கேள்விகளையும் இது கொண்டுள்ளது. நான் இதை மிகவும் பரிந்துரைக்கிறேன்!